நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 6 அன்று சென்னையில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணியாட்கள் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர், உரிய ஆவணங்களின்றி ரூ.4 கோடி பணத்துடன் பிடிபட்டனர். இதையடுத்து அந்த நபர்களை கைது செய்த காவல்துறையினர் தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான ‘ப்ளூ டைமண்ட்’ என்ற நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணத்தை தேர்தல் செலவுக்காக நயினார் நாகேந்திரன் எடுத்து வரச் சொன்னதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதுதான் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய கோரி சுயேட்சை வேட்பாளர் ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.